அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபர் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.
பின்னர் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.
இதன்போது, நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட போது, சந்தேகநபர் அந்த உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.