அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மற்றொரு நபர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் கொல்லப்பட்ட நபரது மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை கொலை செய்வதற்காக மூவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவரை கொலை செய்த பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியில் உள்ள ஒரு சிலைக்கு அடியில் வைத்து விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்ட நபர், கடந்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி அம்பலாந்தோட்டை, அலேகொட மேற்கு பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவத்தின் சந்தேகநபர் ஆவார்.
இது தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மார்ச் 30ஆம் திகதி பிணையில் வெளிவந்திருந்தார்.
அந்தக் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலையாளிகளால் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் அவ்விடத்தில் விட்டுச் சென்ற நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.