400 போலி அமெரிக்க டொலர்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு வெளிநாட்டவர்களை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தஜிகிஸ்தானைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (07) ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலல்ல பகுதியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்த இந்த இரண்டு வெளிநாட்டவர்களும், வணிக நிறுவனம் ஒன்றில் கொடுக்கல் வாங்கலுக்காக 400 போலி அமெரிக்க டொலரை வழங்கியதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுற்றுலா விசா மூலம் இலங்கையில் தங்கியிருந்த சந்தேக நபர்களிடமிருந்து மேலும் 5,200 போலி அமெரிக்க டொலர் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கைதான நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.