போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ‘டுபாய் சுத்தா’ என்பவரின் போதைப்பொருள் வர்த்தகத்தில், பண்டாரகம பகுதிக்கான பிரதான விநியோகஸ்தர் உட்பட 7 சந்தேக நபர்களை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான நபர்களிடம் இருந்து 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 50 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருட்களை பொதி செய்ய பயன்படுத்தப்படும் விசேட காகிதங்கள், பொலித்தீன் பைகள், 4 கையடக்கத் தொலைபேசிகள், கார் ஒன்று மற்றும் ஏனைய உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பண்டாரகம, வெல்மில்ல அலோத்தியாவ பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான குழுவினர் தங்கியிருப்பதாக பண்டாரகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சன்ன அமரசேகரவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.